முதல்-மந்திரி சித்தராமையா வெற்றியை ரத்து செய்ய வேண்டும்


முதல்-மந்திரி சித்தராமையா வெற்றியை  ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும் என ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

மைசூரு

சட்டசபை தேர்தல்

மைசூருவில் கிருஷ்ணராஜா தொகுதி எம்.எல்.ஏ. ஸ்ரீவத்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலின் போது வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டார்.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு குக்கர், இஸ்திரி பெட்டிகளை வழங்கியதாக சித்தராமையாவின் மகன் யதீந்திரா கூறி உள்ளார்.

இதனால் தான் சித்தராமையா வெற்றி பெற்று முதல்-மந்திரி ஆகி உள்ளார். எனவே முதல்-மந்திரி சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் முதல்-மந்திரி சித்தராமையா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். பொதுமக்களை ஆசை காட்டி பொருட்களை வழங்கி தேர்தலில் சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார்.

நியாயமான வெற்றி அல்ல

அவரது வெற்றி நியாயமான வெற்றி அல்ல. எனவே முதல்-மந்திரி சித்தராமையா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.

காங்கிரஸ் கட்சி உத்தரவாத திட்டங்கள் மூலம் மக்களின் ஆசையை கவர்ந்து இருக்கிறார்கள். இதனால் தான் ஆட்சியை பிடித்து உள்ளனர்.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் பொதுமக்கள் யாருக்கும் பணம், பரிசுப்பொருட்களை கொடுப்பதாக கூறி வாக்கு கேட்க கூடாது. காங்கிரஸ் கட்சியின் உத்தரவாத திட்டங்களுக்கு முன்னாள் நீதிபதி சந்தோஷ் ேஹக்டே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் மாநிலத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

தசரா விழா

இதனால் இந்த தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாடாமல் எளிமையாக கொண்டாட எச்.சி.மகாதேவப்பா கூறியுள்ளார். அப்படி என்றால் அரண்மனை வளாகத்தில் மட்டும் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறுமா? அல்லது பன்னி மண்டபம் வரை ஊர்வலம் நடைபெறுமா? என்பதை மந்திரி கூறவேண்டும்.

எளிமையாக கொண்டாடுவதற்கு பதிலாக பாரம்பரியமிக்க, கலாசாரம் கொண்ட தசரா விழாவாக கொண்டாடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story