யார் முதல் மந்திரி? டெல்லி விரையும் சித்தராமையா ! என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டேன் - டிகே சிவக்குமார் சூசகம்


யார் முதல் மந்திரி? டெல்லி விரையும் சித்தராமையா ! என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டேன் - டிகே சிவக்குமார் சூசகம்
x
தினத்தந்தி 15 May 2023 4:53 AM GMT (Updated: 15 May 2023 6:22 AM GMT)

புதிய முதல்-மந்திரியை டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்ததால் நாடு முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருமே கடுமையாக உழைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்து வெற்றியின் பாதைக்கு கொண்டு சென்ற பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு. இதனால் முதல்-மந்திரி பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்துக்கு வழங்கி ஏம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக புதிய முதல்-மந்திரியை டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதை கட்சி மேலிடத்திடம் கொடுத்து விட்டோம். நான் டெல்லி செல்லவில்லை; என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துவிட்டேன். இன்று எனக்கு பிறந்தநாள் என்பதால் விழாக்கள், பூஜைகளில் பங்கேற்கபதற்காக பெங்களூருவில் இருக்கிறேன். புதிய முதல்-மந்திரி யார் என்ற முடிவை டெல்லி தலைமையிடம் விட்டுவிட்டோம் அவர்கள் முடிவு எடுப்பார்கள்" என்று கூறினார்.

இதனிடையே, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா டெல்லிக்கு விரைகிறார். முதல் மந்திரி பதவியை கைப்பற்றுவதில் டிகே சிவக்குமார் - சித்தாரமையா இடையே போட்டா போட்டி நிலவும் நிலையில், சித்தராமையாவின் டெல்லி பயணம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுதியிருக்கிறது.



Next Story