'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்; கடும் நடவடிக்கை எடுக்க பா.ஜனதா வலியுறுத்தல்


பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்; கடும் நடவடிக்கை எடுக்க பா.ஜனதா வலியுறுத்தல்
x

புனேயில் என்.ஐ.ஏ. நடவடிக்கையை கண்டித்து நடந்த போராட்டத்தில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டியம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கடந்த வியாழக்கிழமை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள், அதன் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு நாடு முழுவதும் அந்த அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். மராட்டியத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தநிலையில் என்.ஐ.ஏ.வின் நடவடிக்கையை கண்டித்து நேற்று புனே புனே கலெக்டர் அலுவலகம் முன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து வேனில் ஏற்றி உட்கார வைத்து இருந்த போது அவர்கள் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' (பாகிஸ்தான் வாழ்க) என கோஷமிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தநிலையில் போராட்டத்தின் போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிடப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக புனே போலீசார் கூறியுள்ளனர். இதுகுறித்து புனே போலீஸ் துணை கமிஷனர் சாகர்பாட்டீல் கூறுகையில், " சட்டவிரோதமாக கூடியது தொடர்பாக பாப்புலர்பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளோம். கோஷம் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். " என்றார் இதேபோல புனே பந்த்கார்ட்ன் பகுதியில் உரிய அனுமதி இன்றி போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டதாக 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பந்த்கார்டன் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தநிலையில் போராட்டத்தின் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பா.ஜனதா நிதேஷ் ரானே எம்.எல்.ஏ., " பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள் தப்பிக்க முடியாது. அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். " என டுவிட்டரில் கூறியுள்ளார். மற்றொரு எம்.எல்.ஏ. ராம் சட்புதே, " பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் " என வலியுறுத்தி உள்ளார்.


Next Story