தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 29 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு தீர்வு


தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 29 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு தீர்வு
x

கோப்புப்படம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 29 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் தலைமை தகவல் ஆணையர் யஷ்வர்தன்குமார் சின்கா நேற்று பிரதமர் அலுவலகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்கை சந்தித்து ஜம்மு காஷ்மீர் உள்பட நாடு முழுவதும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் நிலை குறித்து விளக்கம் அளித்தார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தீர்வு அளிப்பது அதிகரிப்பதுடன், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறைந்துவருவதாகவும் சின்கா தெரிவித்தார். அதற்கு ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார். கடந்த ஆண்டு 29 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவை யில் இருந்தன. தற்போது அது 19 ஆயிரமாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில் 2021-2022-ம் நிதியாண்டில் 28 ஆயிரத்து 793 விண்ணப்பங்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை 2022-2023-ம் நிதியாண்டில் 29 ஆயிரத்து 104 ஆக அதிகரித்து இருப்பதாகவும் மந்திரியிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீரில் சுமார் 300 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும், விரைவில் அவற்றுக்கு தீர்வு காணப்படும் என்றும் சின்கா உறுதி அளித்தார்.


Next Story