கோலார் கில்பர்ட்ஸ் பகுதியில் முட்புதர்கள் அகற்றம்

கோலார் தங்கவயல் கில்பர்ட்ஸ் பகுதியில் முட்புதர்களை அகற்றி நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோலார் தங்கவயல்:-
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் பகுதிக்கு உட்பட்ட எட்கர்ஸ் வார்ட்டில் கில்பர்ட்ஸ் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் முட்புதர்கள் உள்ளன.
இது குறித்து வார்டு மக்கள், கவுன்சிலரான மார்க்சிஸ்ட்டு கட்சியை சேர்ந்த தங்கராஜ் என்பவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கவுன்சிலர் தங்கராஜ் நகரசபை கமிஷனரிடம் கூறி முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
அதன்பேரில் நேற்று சுமார் 20-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளிகள் முட்புதர்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். செடி கொடிகளை வெட்டும் எந்திரத்தின் மூலம் வார்டில் உள்ள பகுதிகளில் முட்புதர்களை அவர்கள் வெட்டி அகற்றினர்.
மேலும் டிராக்டர்களை கொண்டு குப்பை கழிவுகளை அகற்றினார்கள். வார்டு முழுவதும் சுமார் 5 இடங்களில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.