நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றிய பரிந்துரையை மீண்டும் பரிசீலிக்க கொலிஜீயம் மறுப்பு


நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றிய பரிந்துரையை மீண்டும் பரிசீலிக்க கொலிஜீயம் மறுப்பு
x

கோப்புப்படம்

சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து நீடிக்க விரும்பும் நீதிபதி வி.எம்.வேலுமணியின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு கொலிஜீயம் நிராகரித்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக வி.எம்.வேலுமணி கடந்த 2013, டிசம்பர் 20-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவரை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கொலிஜீயம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி முன்மொழிந்தது.

இதை மறுபரிசீலனை செய்யுமாறு வி.எம்.வேலுமணி விடுத்த கோரிக்கையை கொலிஜீயம் நிராகரித்ததுடன், கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றும் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தியது.

இந்த நிலையில் சென்னையில் ஒதுக்கி உள்ள அரசு குடியிருப்பை வைத்துக்கொள்ளும் வகையில், கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு பதிலாக மணிப்பூர் அல்லது திரிபுரா ஐகோர்ட்டுக்கு மாற்றுமாறும் நீதிபதி வி.எம்.வேலுமணி கொலிஜீயத்துக்கும் மீண்டும் கடிதம் எழுதினார்.

சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து நீடிக்க விரும்பும் வி.எம்.வேலுமணியின் கோரிக்கையை ஏற்கனவே நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சுப்ரீம்கோர்ட்டு கொலிஜீயம், கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றும் முடிவையும், மணிப்பூர் அல்லது திரிபுரா ஐகோர்ட்டுக்கு மாற்ற கோருவதையும் மறுபரிசீலனை செய்ய, ஏற்புடைய காரணம் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது.


Next Story