எது வந்தாலும் என் கடமை அப்படியே இருக்கிறது - ராகுல்காந்தி டுவீட்


எது வந்தாலும் என் கடமை அப்படியே இருக்கிறது - ராகுல்காந்தி டுவீட்
x

எது வந்தாலும் என் கடமை அப்படியே இருக்கிறது என்று ராகுல்காந்தி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும், "அதிகபட்ச தண்டனை காரணமாக தனிநபரின் உரிமை மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது. ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகம் வென்றுள்ளது, அரசியலமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. "வாய்மையே வெல்லும்! ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். நீதி வழங்கப்பட்டுள்ளது.

பாஜகவின் சதி ராகுல்காந்தியை வேட்டையாடுவது என்பது முற்றிலும் அம்பலமாகி உள்ளது. அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது. மக்கள் அளித்த ஆணையை மதித்து, நாட்டை ஆளத் தொடங்க வேண்டிய தருணம் இது. அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் மோசமான முறையில் தோல்வியடைந்துள்ளனர்" என்று தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் ராகுல்காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "எது வந்தாலும் என் கடமை அப்படியே இருக்கிறது. இந்தியாவின் ஐடியாவை பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story