கேரள முன்னாள் மந்திரிக்கு எதிரான கண்டனம் - வழக்குப்பதிவு செய்வது குறித்து டெல்லி போலீஸ் ஆலோசனை


கேரள முன்னாள் மந்திரிக்கு எதிரான கண்டனம் - வழக்குப்பதிவு செய்வது குறித்து டெல்லி போலீஸ் ஆலோசனை
x

கேரள முன்னாள் மந்திரி ஜலீல் மீது வழக்குப்பதிவு செய்ய சட்ட ஆலோசனையில் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள சபை வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை கமிட்டியில் கே.டி. ஜலீல் உறுப்பினராக உள்ளார். இந்தக் கமிட்டியின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் ஜலீல் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அங்கு சென்ற விவரங்கள் குறித்து தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆசாத் காஷ்மீர் என்றும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை சேர்த்து இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜலீலின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தனது கருத்தை ஜலீல் திரும்ப பெற்றுக்கொண்டார். இதனிடையே ஜலீலின் கருத்து தொடர்பாக டெல்லி காவல்நிலையத்தில் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் புகார் தொடர்பாக ஜலீல் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story