மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்: கர்நாடக முதல் மந்திரி பரபரப்பு பேச்சு


மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்:  கர்நாடக முதல் மந்திரி பரபரப்பு பேச்சு
x

கோப்புப்படம் 

மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என கர்நாடக முதல் மந்திரி பேசினார்.

மைசூரு,

கர்நாடகத்தில் உள்ள அணைகளில் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் மைசூருவில் உள்ள கபினி அணைகள் முக்கியமானவை. குடகு மாவட்டம் மற்றும் வயநாடு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும்.

இந்த இரு அணைகளின் நீர் தான் காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழ்நாடு-கர்நாடகம் இடையே பகிர்ந்து வரப்படுகிறது. இந்த நிலையில் இரு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஜூன் மாதம் இறுதி முதல் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணைகளுக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையும், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. நடப்பு ஆண்டில் ஜூலை 2-வது வாரத்திலேயே இரு அணைகளும் நிரம்பிவிட்டன. 4 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை காலத்தில் இரு அணைகளும் ஜூலையில் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

அணைகள் நிரம்பியதை தொடர்ந்து வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அணைகளில் முதல்-மந்திரி பாகினா பூஜை சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அணைகள் நிரம்பியதை தொடர்ந்து நேற்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை இரு அணைகளிலும் பாகினா பூஜை நிறைவேற்றினார்.

மண்டியாவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மேகதாது திட்டம் தொடர்பான வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தீர்ப்பு வெளியானதும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும். அதன் பிறகு திட்ட பணிகள் தொடங்கப்படும்.

இந்த திட்டத்தால் பெங்களூரு நகர மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். இந்த திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசன திட்டங்களால் மைசூரு, மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும். ங்கள் அரசு விவசாயிகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

மண்டியா பகுதியின் வளர்ச்சிக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அர்ப்பணிப்பு மனநிலையுடன் பணியாற்றினால் நம்மை மக்கள் நினைவில் வைத்து கொள்வார்கள். மண்டியா சர்க்கரை ஆலையில் உற்பத்தி பணிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கப்படும். இதற்கு தேவையான செலவுக்கு அரசே நிதி ஒதுக்கும். இதனால் இங்குள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

தற்போது பெய்து வரும் மழையால் கர்நாடகத்தில் முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன. ஆறுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் கலாசாரத்தையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய காவிரி ஆற்றை நாம் பயன்படுத்தி கொள்வது நமது கடமை. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேகதாது அணை, கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ளது. இந்த அணை ரூ.9 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடகம், மத்திய அரசு மற்றும் மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுமதி கேட்டு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு மேகதாது அணைகட்டும் முடிவில் தீவிரமாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்த அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story