தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு


தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு
x

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,


நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், கூட்டத்தொடர் தொடங்கியது முதல், இரு அவைகளிலும் ராகுல் காந்தி மற்றும் தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. கடந்த வாரம் முழுவதும், இங்கிலாந்து நாட்டில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளுங்கட்சியும், தொழிலதிபர் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினரும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இரு அவைகளிலும் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டன. நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதி கொள்ளும் வகையில், ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி பேசி கொண்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை வழக்கம்போல் கூடின. இதில் உறுப்பினர்கள் பேச தொடங்கினர். எனினும், உறுப்பினர்களின் அமளியால், அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.

இதுபற்றி நாடாளுமன்ற மேலவை தலைவர் பேசும்போது, விதி எண் 267-ன் கீழ் 14 நோட்டீஸ்கள் பெறப்பட்டு உள்ளன. அவற்றில் 9 நோட்டீஸ்கள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வந்து உள்ளன என கூறினார்.

இதனை தொடர்ந்து எழுந்த அமளியால் மதியம் 2 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதுபோன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் இன்றுடன் மேலவை 10-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் தலா 2 முறையும், வெள்ளி கிழமை ஒரு முறையும் மேலவை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மேலவையில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர், பா.ஜ.க. எம்.பி.க்கள், லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால், அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, மக்களவையிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தொடர்ந்து, கோஷங்களை எழுப்பினர். காங்கிரஸ் உறுப்பினர்களும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து, மக்களவையும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.


Next Story