மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வதில் தகராறு; இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்


மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வதில் தகராறு; இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்
x

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொள்ளேகால்;


இருதரப்பினர் இடையே மோதல்

சாம்ராஜ்நகர் டவுன் சந்தேமரஹள்ளி பகுதியை சேர்ந்த ஏராளமான வாலிபர்கள் இருப்பிரிவினராக பிரிந்து அடிக்கடி மோட்டார் சைக்கிள் சாகசம் நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் சாகசம் தொடர்பாக நேற்று முன்தினமும் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் அந்தப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சந்தேமரஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீஸ் தடியடி

அப்போது அவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதால், போலீசார் இருதரப்பினர் மீதும் தடியடி நடத்தினார்கள். இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அந்தப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் சந்தேமரஹள்ளி பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து சென்றனர்.


Next Story