சாகரில் ஏரியில் மூழ்கி சமையல் தொழிலாளி பலி


சாகரில் ஏரியில் மூழ்கி சமையல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:47 PM GMT)

சாகரில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சிவமொக்கா-

சாகரில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

சிவமொக்கா மாவட்டம் சாகர் டவுன் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் கவுடா (வயது45). இவர் அப்பகுதியில் சமையல் (கேட்டரிங்) வேலை செய்து வருகிறார். சதீசின் மைத்துனர் ஜேடிசரா கிராமத்்தை சேர்ந்தவர் ராமபட்டா. நாடுமுழுவதும் நேற்றுமுன்தினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஜேடிசரா கிராமத்தில் உள்ள மைத்துனர் வீட்டில் கொண்டாட சதீஷ் முடிவு செய்தார். அதன்படி, அவர் நேற்றுமுன்தினம் ராமபட்டா வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ராமபட்டாவின் குடும்பத்துடன் சதீஷ் கொண்டாடினார். அவருக்கு மதியம் விருந்தும் அளிக்கப்பட்டது.

சிலையை கரைக்க

இந்தநிலையில், வீட்டில் வைத்திருந்த விநாயகர் சிலையை கரைக்க அருகில் உள்ள ஏரிக்கு இரவு சதீஷ் தனது உறவினர்களுடன் சென்றார். அப்போது, சதீஷ் சிலையை கரைக்க ஏரியில் இறங்கினார். இதில் அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனை கவனித்த உறவினர்கள் சதீசை காப்பாற்ற சென்றனர். ஆனால் அவர் அதற்குள் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அவர்கள் சாகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் சம்பவ இடத்திற்கு அனந்தபுரம் போலீசாருடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

ரப்பர் படகு மூலம்

பின்னர் ரப்பர் படகு மூலம் சதீசை தீயணைப்பு வீரர்கள் தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியை அவர்கள் நிறுத்தினர். இதையடுத்து நேற்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சதீசின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அனந்தபுரம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மைத்துனர் வீட்டிற்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட வந்தவர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story