சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: ஒடிசா முதல் மந்திரியுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை


கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புவனேஷ்வர்,

கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பலாஷோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் ரயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டதாகவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.கவிழ்ந்து கிடக்கும் ரயிலுக்குள் இருந்து காயம் அடைந்த பயணிகள் மீட்கப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 122 பேர் காயம் அடைந்து இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை வந்த ரயில் விபத்துக்குள்ளான நிலையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டலின் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


Next Story