குஜராத், இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடக்கம்


குஜராத், இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2022 2:30 AM GMT (Updated: 8 Dec 2022 3:05 AM GMT)

குஜராத், இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 93 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின.

வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதற்கு இன்று விடை கிடைத்துவிடும். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

குஜராத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றுமா? காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றுமா? என்பதற்கு இன்னும் விடை கிடைத்துவிடும்.

இமாச்சலபிரதேசம்:-

68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இமாச்சலபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்குமா? காங்கிரஸ் ஆட்சியமைக்குமா? ஆம் ஆத்மி ஆட்சியமைக்குமா? என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.


Next Story