தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதனால் அவர்களின் 2 குழந்தைகள் அனாதை ஆகி உள்ன.
மண்டியா:-
குடும்ப தகராறு
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கே.ஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தம் (வயது 46). இவரது மனைவி வித்யா (32). இந்த தம்பதிக்கு 3-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் புருஷோத்தம்-வித்யா இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து புருஷோத்தம் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அவர்களது பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றுவிட்டனர்.
தற்கொலை
இதனால் வீட்டில் தனியாக இருந்த வித்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் புருஷோத்தம் வீட்டுக்கு விரைந்து வந்தார். அவர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த நிலையில், வீட்டின் அருகில் உள்ள உள்ள தோட்டத்துக்கு சென்ற புருஷோத்தம், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கப்பட்டணா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு சிகிச்சைக்காக பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அனாதை ஆகின
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினையில் வித்யா தற்கொலை செய்துகொண்டது அறிந்ததும், புருஷோத்தமும் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்டதால் அவர்களது 2 குழந்தைகள் அனாதையாகி உள்ளன. இதுகுறித்து ஸ்ரீரங்கப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.