ஆடை வடிவமைப்பாளர் பாலியல் புகார்: பாடகர் ராகுல் ஜெயினுக்கு முன்ஜாமீன் மறுப்பு


ஆடை வடிவமைப்பாளர் பாலியல் புகார்: பாடகர் ராகுல் ஜெயினுக்கு முன்ஜாமீன் மறுப்பு
x

பாடகர் ராகுல் ஜெயின் மீதான கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

பிரபல சினிமா பின்னணி பாடகர் ராகுல் ஜெயின். இவர் இந்தியில் பல பாடல்களை பாடி இருக்கிறார். ஜூட்டா கஹின்ஹா, காகஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

மும்பையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் ராகுல் ஜெயின் தன்னை பலாத்காரம் செய்ததாக ஓஷிவாரா போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

அவரது மனுவில், ''என்னை ராகுல் ஜெயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்டு அவரது தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக வைத்துக் கொள்வதாகவும், இதற்காக அந்தேரி புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் வந்து சந்திக்கும்படியும் அழைத்தார். அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு தனது உடைகளை காட்டுவதாக கூறி படுக்கை அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டார்" என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் பாடகர் ராகுல் ஜெயின் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, பாடகர் ராகுல் ஜெயின் மீதான புகார் குறித்து விரிவான விசாரணை தேவை என்றும், ராகுல் ஜெயினை காவலில் வைத்து விசாரணை செய்வது அவசியம் என கூறி அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.


Next Story