தீபாவளிக்கு 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் -சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தீபாவளிக்கு 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் -சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

பேரியம் மற்றும் சரவெடி கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்ற உத்தரவு ெதாடரும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று, தீபாவளி.

தீபாவளியில் பட்டாசு

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவலாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை கொண்டாட்டங்களில் பட்டாசுகளும் முக்கிய இடம் பிடித்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த கொண்டாட்டங்களுக்காக தமிழ்நாட்டின் சிவகாசி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் இந்த பட்டாசு தொழிலை நம்பி சிவகாசியில் மட்டுமே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் ஆண்டுதோறும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால் மக்களுக்கு அதிக நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

குறிப்பாக பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாக கூறி, அவற்றுக்கு தடை விதிக்கக்கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

மேலும் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் மனு

இதைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்டு போலியான பசுமை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களின்உரிமங்களை ரத்து செய்யக்கோரியும் அர்ஜுன் கோபால் இடைக்கால மனு தாக்கல் செய்தார்.

அதேநேரம் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை தளர்த்தவும், பேரியம்,சரவெடிகளை கொண்டுபசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக்கோரியும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

டெல்லியில் தடை

இந்த மனுக்கள் மீது கடந்த செப்டம்பர் 14-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி தனது வாதத்தில் கூறியதாவது:-

டெல்லியில் சட்டவிரோத பட்டாசு விற்பனை கண்காணிக்கப்படுகிறது. சட்ட விரோதமாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பட்டாசு விற்பவர்கள், வெடிப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் வழக்கமான பட்டாசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்த பிறகு, பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசு விற்பனைக்கான உரிமங்கள் 2016-ம் ஆண்டு முதல் தற்காலிகமாகவே வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கோர்ட்டு உத்தரவை மீறுதல்

உடனே நீதிபதிகள், 'பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தீர்வாகாது. சட்டவிரோத பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்புக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுதான் உரிய தீர்வாக இருக்க முடியும். பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் மாநில அரசு தடை விதிக்கும் பட்சத்தில், அது முழுமையான தடையாக இருக்க வேண்டும். எவ்வித தற்காலிக உரிமத்தையும் டெல்லி போலீஸ் வழங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டாசு விற்பனைக்கு உரிமம் வழங்கினால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாகிவிடும்' என குறிப்பிட்டனர்.

இதைத்தொடர்ந்து, மனுதாரர்கள் அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் தனது வாதத்தில் கூறியதாவது:-

ஆயுட்காலம் குறைகிறது

காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழப்புகள் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாடு தலைநகருக்கு மட்டுமானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினையாகவும் உள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் குறைவதாக அண்மைகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்லியில் பட்டாசுக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டாலும், தடையை மீறி சட்டவிரோதமாக பட்டாசுகள் கொண்டுவரப்பட்டு வெடிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. பட்டாசு வெடிப்பதற்கு முழுமையான தடையை விதிக்க வேண்டும் என கோரவில்லை. பேரியம் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய பார்முலா

பின்னர் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான் தனது வாதத்தில் கூறியதாவது:-

பட்டாசு தொடர்பான முழுமையான ஆய்வுகள் முன்பு இல்லை. இதனால், பேரியம் பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தற்காலிகமாக தடை விதித்தது. ஆனால் தற்போது விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு புதிய பார்முலா கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதைய ஆய்வுகளின் படி ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரை பேரியம் உள்ளிட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் எந்தவொரு நாட்டிலும் பட்டாசு உற்பத்தியில் பேரியத்திற்கு தடை விதிக்கப்படவில்லை.

சி.ஐ.எஸ்.ஆர்., நீரி போன்ற மத்திய அரசின் அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ள பார்முலாவைக் கொண்டே பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசு தயாரிப்புக்கு பேரியம் நைட்ரேட் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இடையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தனர்.

உற்பத்தியாளர் மனு தள்ளுபடி

இந்த நிலையில் இந்த மனுக்கள் தொடர்பான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று பிறப்பித்தது.

அதன்படி நீதிபதிகள் தங்கள் உத்தரவில், 'மேம்படுத்தப்பட்ட பார்முலாவை கொண்ட பேரியம் மற்றும் சரவெடிகளைக் கொண்டு பசுமை பட்டாசுகளை தயாரிக்க அனுமதிக்க கோரிய பட்டாசு உற்பத்தியாளர்களின் மனுக்கள் தற்போதைக்கு நிராகரிக்கப்படுகின்றன. மீதமுள்ள மனுக்கள் நிலுவையில் வைக்கப்படுகின்றன' என தெரிவித்தனர்.

பசுமை பட்டாசு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தலையிடவில்லை என கூறிய நீதிபதிகள், அவற்றை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் திட்டவட்டமாக கூறினர்.

இதன் மூலம் தீபாவளி பண்டிகையன்று வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வழங்கப்பட்ட அனுமதியே தொடர்கிறது.

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது.


Next Story