கர்நாடக மந்திரி சபையில் இடம் பெற்ற 16 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு


கர்நாடக மந்திரி சபையில் இடம் பெற்ற 16 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு
x

கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் இடம் பெற்ற 16 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்து உள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்று கொண்டார். துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் பொறுப்பேற்று கொண்டார்.

இதன்பின் முதல்-மந்திரி சித்தராமையா முழு மந்திரி சபையையும் உருவாக்கி உள்ளார். பல்வேறு மந்திரிகளுக்கான இலாகாக்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

எனினும், அவரது மந்திரி சபையில் இடம் பெற்ற 34 மந்திரிகளில் 16 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன என்ற சர்ச்சை எழுந்து உள்ளது.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதவி பிரமாணத்தில் அளித்த தகவலின்படி, 16 மந்திரிகளுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதுடன், அவற்றில் சில வழக்குகளில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, அதிக அளவாக மந்திரி நாகேந்திரா மீது 42 வழக்குகள் உள்ளன.

அவற்றில், 21 வழக்குகள் லோகயுக்தாவில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருக்கு எதிராக 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவற்றில் சான்றுகளை அழித்தல், லஞ்சம், மோசடி, பொய்யான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட தீவிர வழக்குகளும் பதிவாகி உள்ளன. முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராக 13 வழக்குகள் உள்ளன.


Next Story