'சிலிண்டர் விலை குறைப்புக்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை' - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்


சிலிண்டர் விலை குறைப்புக்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
x
தினத்தந்தி 29 Aug 2023 8:29 PM GMT (Updated: 29 Aug 2023 8:31 PM GMT)

சிலிண்டர் விலையை குறைக்கும் முடிவு, நாட்டின் பெண்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில் சிலிண்டர் விலை குறைப்புக்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கை என்பது ஓணம் மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகைகளை முன்னிட்டு நாட்டின் பெண்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று தெரிவித்தார்.

மேலும் இந்த முடிவுக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பயனாளர்களுக்கு ஒரு நிவாரணமாகவே இந்த விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story