தார்வார் விபத்து: இறந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
தார்வார் சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல் -மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
உப்பள்ளி:
தார்வார் மாவட்டம் ரேவனசித்தேஸ்வரா பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமணம் முடிந்து மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். மணமகள் குடும்பத்தினர் பயணித்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தார்வார் மாவட்டத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற ஜீப் விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கேட்டு கொண்டார். இதையடுத்து 9 பேர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இறந்தவர்களின் ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.