பெங்களூருவில் ஆம் ஆத்மி பிரமுகருக்கு கொலை மிரட்டல்


பெங்களூருவில் ஆம் ஆத்மி பிரமுகருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

பெங்களூருவில் ஆம் ஆத்மி பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்,

பெங்களூரு:-

ஆம் ஆத்மி கட்சியின் பெங்களூரு நகர இளைஞர் பிரிவு துணை தலைவராக கிரிஷ் என்பவர் உள்ளார். இவர் தனது குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டிடம் குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்து இருந்தார்.

இதேபோல் அவர் சட்டவிரோத மதுவிடுதிகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் 400-க்கும் மேற்பட்ட புகார்களை கொடுத்துள்ளார். அதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவருக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிரிஷ் அம்ருதஹள்ளி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் சமூக பிரச்சினைகள் குறித்து குரல் கொடுப்பதால் தனக்கு செல்போன் மூலம் பலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் கூறினார்.

தினமும் தனது வீட்டின் அருகே 13-க்கும் மேற்பட்டோர் வந்து நிற்பதாகவும், அவர்கள் தன்னை பின்தொடர்ந்து வருவதாகவும் கூறினார். அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story