மராட்டிய முதல்-மந்திரி, மகனுக்கு கொலை மிரட்டல்: கல்லூரி மாணவர் கைது


மராட்டிய முதல்-மந்திரி, மகனுக்கு கொலை மிரட்டல்:   கல்லூரி மாணவர் கைது
x

மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும் அவரது மகனுக்கும் சமூக வலைத்தளமான எக்ஸ்-இல் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

மும்பை

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு பதவியில் உள்ளது. இந்த ஆட்சியில் ரவுடிகள் பெருகிவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி அபய் என்ற வாலிபர் அவரது எக்ஸ் பக்கத்தில், " நான் ரவுடித்தனம் செய்யலாம் என நினைக்கிறேன். அதற்காக ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் அனுபவம் உள்ளது. மற்ற ரவுடிகள் எனக்கு ஆலோசனை கூறலாம். " என கூறியிருந்தார்.

அதற்கு சுபம் வர்காத் என்ற வாலிபர், " சகோதரரே நான் உங்களுக்கு துப்பாக்கி தருகிறேன். ஆனால் நீங்கள் முதலில் ஏக்நாத் ஷிண்டேவைும், ஸ்ரீகாந்த் ஷிண்டேவையும் கொலை செய்ய வேண்டும். " என கூறியிருந்தார்

இந்த கொலை மிரட்டல் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே , அவரது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் நான்தெட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் சுபம் வர்காத் என்பது தெரியவந்தது. மேலும் அவர் புனேயில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புனே விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story