2024 நாடளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளோம் - பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்


2024 நாடளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளோம் - பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்
x

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்து உள்ளார்.

பாட்னா,

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இன்று காலை நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசும் போது

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும் என்றார்.

தேசிய மாநாட்டு கட்சியின் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்க விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாட்டை விமர்சித்தார்.

அதேபோல ஆம் ஆத்மி தரப்பில், டெல்லி சேவைகள் மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்குமா? என கிடுக்குப்பிடி கேள்வி முன்வைக்கப்பட்டது.

இத்தகைய காரசார விவாதங்களுக்கு இடையே பேசிய சரத்பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் மராட்டிய மாநிலத்தில் நாங்கள் இருவரும் 25 ஆண்டுகளாக கடுமையான எதிரிகளாக இருந்து சண்டை போட்டவர்கள்; இப்போது இணைந்து செயல்படவில்லையா? அதேபோலதான் நாம் அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்து உள்ளார்.

மேலும் கூட்டம் முடிந்ததும் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. வரும் நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் மற்றொரு கூட்டம் நடைபெறும் என கூறினார்.


Next Story