டெல்லி: இண்டிகோ விமானத்தின் முன் நின்று விட்ட கார்; விமானம் புறப்படுவதில் தடங்கல்


டெல்லி:  இண்டிகோ விமானத்தின் முன் நின்று விட்ட கார்; விமானம் புறப்படுவதில் தடங்கல்
x

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் முன் கார் ஒன்று செயல்படாமல் நின்றதில் விமானம் புறப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது.





புதுடெல்லி,



டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 2வது முனைய பகுதியில் இண்டிகோ விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த விமானம் பீகாரின் பாட்னா நகருக்கு இன்று புறப்பட்டு செல்ல இருந்தது.

இந்த நிலையில், விமானத்தின் மூக்கு பகுதி எனப்படும் முன்பகுதியில் மாருதி கார் ஒன்று வந்து நின்றது. அதன்பின்னர் கார் செயல்படவில்லை. இதனால் விமானம் புறப்பட்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டது.

இதனால் விமான பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளானார்கள். இண்டிகோ விமானம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. கடந்த ஜூலை 28ந்தேதி இதேபோன்று ஒரு சம்பவத்தில் அசாம் விமான நிலையத்தில், கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது.

இதன்பின் விமானம் நிறுத்தப்பட்டு 6 மணிநேரம் வரை அதனை சரிசெய்ய முயன்று, தொழில் நுட்ப கோளாறை சீர் செய்யும் பணி தோல்வியில் முடிந்தது. பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த ஜூலை 21ந்தேதி இண்டிகோ விமான பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். உடனடியாக விமானம் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

அதற்கு முன், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்த இண்டிகோ விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறால், பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு திருப்பி விடப்பட்டது.



Next Story