டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு பதிவு மந்தம்; 2 மணிவரை 30 சதவீதம் வாக்குகள் பதிவு


டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு பதிவு மந்தம்; 2 மணிவரை 30 சதவீதம் வாக்குகள் பதிவு
x

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வாக்கு பதிவு மந்தகதியில் நடந்து வருகிறது. மதியம் 2 மணிவரை 30 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.



புதுடெல்லி,


டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலுக்காக 13 ஆயிரத்து 638 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. தேர்தலை முன்னிட்டு பதற்றம் நிறைந்த தர்யாகஞ்ச் மற்றும் ஜமா மசூதி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். எனினும், காலை முதல் வாக்கு பதிவு பல இடங்களில் அமைதியுடன் நடந்து வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5.30 மணிவரை நடைபெறும். இன்று நடைபெறும் டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில், காலை 10.30 மணியளவில் 9 சதவீதமும், மதியம் 12 மணிவரை 18 சதவீதம் அளவுக்கும் வாக்கு பதிவு இருந்தது. மதியம் 2 மணிவரை மந்தகதியிலேயே வாக்கு பதிவு நடந்து வருகிறது. இதன்படி, மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.


Next Story