அரசியல் விளம்பரங்களுக்காக செலவழித்த ரூ.163 கோடியை வழங்க ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு நோட்டீஸ்


அரசியல் விளம்பரங்களுக்காக செலவழித்த ரூ.163 கோடியை வழங்க ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு நோட்டீஸ்
x

அரசியல் விளம்பரங்களுக்காக 10 நாட்களுக்குள் ரூ.163.62 கோடியை டெபாசிட் செய்யுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி:

2016-17ம் ஆண்டில் விதியை மீறி செய்த அரசியல் விளம்பரங்களுக்காக 164 கோடி ரூபாயை வழங்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி அரசின் தகவல் மற்றும் விளம்பர இயக்குநரகம் (டிஐபி) சுப்ரீம் கோர்ட் வெளியிடப்பட்ட அரசியல் விளம்பரங்கள் குறித்த வழிகாட்டுதல்களை மீறியதாகவும், அரசின் கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது

ஆம் ஆத்மி பணம் செலுத்தத் தவறினால், ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்திற்கு சீல் வைப்பது மற்றும் கட்சியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா, 2015-2016 ஆம் ஆண்டில் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்ட ரூ.99.31 கோடியை ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து வசூலிக்குமாறு டெல்லி தலைமைச் செயலாளருக்கு டிசம்பர் 19, 2022 அன்று உத்தரவிட்டார்.

கவர்னரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, டிஐபி அசல் ரூ.99.31 கோடியும், வட்டியாக ரூ.64.31 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.163.62 கோடியை மீட்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு மே 2015 மற்றும் மார்ச் 2016 வெளியிட்ட தீர்ப்புகளில். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், விளம்பர உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அரசின் வருவாயின் உற்பத்தியற்ற செலவினங்களை அகற்றுவதற்கும், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அரசு விளம்பரங்களின் உள்ளடக்க ஒழுங்குமுறைக் குழு (சிசிஆர்ஜிஏ) ஏப்ரல் 2016 இல் அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் அஜய் மாக்கன் முன்வைத்த புகாரைத் தொடர்ந்து, சிசிஆர்ஜிஏ விசாரணை நடத்தியதில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களை மீறிய சில விளம்பரங்களை டெல்லி அரசு கண்டறிந்தது.

சிசிஆர்ஜிஏ உத்தரவுக்குப் பிறகு, செப்டம்பர் 22, 2016 அன்று ஆம் ஆத்மி அரசாங்கத்தால் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது, அந்த குழு நவம்பர் 11, 2016 அன்று தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்து, டிஐபி, டெல்லி அரசால் மார்ச் 30, 2017 அன்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை நோட்டீஸ் வழங்ங்கியது. டெல்லி ஐகோர்ட்டில் இந்த நோட்டீசை எதிர்த்து ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது, ஆனால் ஆம் ஆத்மியிடம் இருந்து தொகையை வசூலிக்க தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.


Next Story