திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற தேவஸ்தான ஊழியர்கள்5 பேர் கைது


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற தேவஸ்தான ஊழியர்கள்5 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2023 10:45 PM GMT (Updated: 19 May 2023 10:46 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. லட்டுகள் தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுகளில் விற்பனை கவுண்ட்டர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லட்டுகளை திருடி விற்பனை செய்வதாக தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்தது. அந்தத் தகவலின்பேரில் தேவஸ்தான பறக்கும்படை அதிகாரிகள் லட்டுகளை எடுத்துச் செல்லும் பணியை கண்காணித்து வந்தனர்.

அப்போது தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டு இருந்த 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர். அவர்களை பறக்கும் படை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இதுவரை 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரும் திருமலை 2-டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story