49 அலங்கார ஊர்திகள், 55 கலைக்குழுவினரின் அணிவகுப்புடன் மைசூருவில் நாளை தசரா ஊர்வலம்


49 அலங்கார ஊர்திகள், 55 கலைக்குழுவினரின் அணிவகுப்புடன் மைசூருவில் நாளை தசரா ஊர்வலம்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:47 PM GMT)

49 அலங்கார ஊர்திகள், 55 கலைக்குழுவினரின் அணிவகுப்புடன் மைசூருவில் நாளை (செவ்வாய்க்கிழமை) தசரா ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்க உள்ளார்.

மைசூரு:

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றதாகும். நவராத்திரி மற்றும் விஜயதசமியையொட்டி தசரா விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழா நன்மைக்கும், தீமைக்கும் நடைபெறும் போட்டியாக கருதப்படுகிறது. கர்நாடகத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை வதம் செய்த நாள் தான் விஜயதசமி நாளாகவும், தசரா விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 1610-ம் ஆண்டு விஜயநகர் பேரரசு காலத்தில் மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையாரால் ஸ்ரீரங்கப்பட்டணாவில் மகாநவமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் மைசூருவை ஆட்சி செய்த யது வம்ச மன்னர்களால் தசரா விழா நடத்தப்பட்டு வந்தது. தற்போது மைசூரு தசரா விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கொண்டாடப்படும் தசரா விழா 414-வது ஆகும்.

இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த 15-ந்தேதி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது. இதில் திரைப்பட இசையமைப்பாளர் ஹம்சலேகா கலந்துகொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார். இதில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முதலில் தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாட அரசு முடிவு செய்தது. ஆனால் வறட்சி காரணமாக இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்தது. தசரா விழா எளிமையாக நடந்தாலும் பாரம்பரிய முறைப்படி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தசரா விழாவையொட்டி இளைஞர் தசரா, விவசாய தசரா, உணவு மேளா, மகளிர் தசரா, விளையாட்டு தசரா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், மலர் கண்காட்சியும் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அரண்மனை வளாகம், மானச கங்கோத்ரி, மகாராஜா கல்லூரி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. மேலும் தசரா கண்காட்சி வளாகத்தில் பொருட்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை, அரசு கட்டிடங்கள், பழங்கால கட்டிடங்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரம் முழுவதும் மின்விளக்குகளால் வரவேற்பு அலங்கார வளைவும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மைசூரு நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க மைசூரு அரண்மனையில் தசரா விழாவையொட்டி நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகள், பூஜைகள், சம்பிரதாயங்கள் ஆகியவை வழக்கம்போல் நடந்தன. குறிப்பாக தங்கம், வைரம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் யதுவீர் தனியார் தார்பார் நடத்தினார். தசரா விழாவின் 8-வது நாளான நேற்று மைசூரு அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் நவராத்திரியையொட்டி அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த கொலுவுக்கும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. அதில், ராஜ உடையில் மன்னர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) ஆயுத பூஜையையொட்டி காலை 7 மணிக்கு மன்னர் யதுவீர் அம்பாவிலாஸ் அரண்மனையில் ராஜகுரு, மகாராணி பிரமோதா தேவி ஆகியோருக்கு பாதபூஜை செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து சண்டி ஹோமம், கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்கிறார். பின்னர் காலை 8 மணிக்கு கோடி சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் பன்னி மரத்துக்கு பூஜை செய்கிறார். இதையடுத்து பட்டத்து யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவை புடைசூழ தங்கப்பல்லக்கில் ஊர்வலமாக சென்று கலச தீர்த்தம் கொண்டு வருகிறார்.

இதையடுத்து காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை அரண்மனை கட்டிடத்திற்குள் மல்யுத்த போட்டி நடக்கும் மைதானத்தில் மன்னர் யதுவீர் ஆயுத பூஜை நிறைவேற்றுகிறார். அப்போது பல்லக்கு, பீரங்கி, இரும்பு ஆயுதங்கள், மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்கு பூஜை செய்கிறார். பின்னர் பட்டத்து யானை, குதிரை, ஒட்டகம், பசுமாடு ஆகியவற்றுக்கு பாரம்பரிய முறையில் பூஜை செய்கிறார்.

இதையடுத்து மதியம் 12 மணி அளவில் யதுவீர் ராஜ உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துகிறார். பின்னர் நவராத்திரி கடைசி நாளின் பூஜைகளை அவர் முடித்து வைக்கிறார்.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் எனும் தசரா ஊர்வலம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி பல்வேறு பூஜைகள் நடக்கிறது. பின்னர் அரண்மனை வளாகத்தில் பிரத்யேக தளத்தில் கத்திபோடும் மல்யுத்த நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் மொட்டை தலையுடன் இரு வீரர்கள் மல்லுகட்டுவார்கள். இருவரின் கைகளிலும் கூர்மையான கத்தி இருக்கும். அதில் ஒருவரின் தலையில் அந்த கத்தியால் குத்தி ரத்தம் சிந்தினால் போட்டி நிறுத்தப்பட்டு தசரா ஊர்வல ஏற்பாடுகள் தொடங்கப்படும். இதையடுத்து மன்னர் யதுவீர் அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னிமரத்திற்கு பூஜை செய்து அதனை வெட்டுவார்.

பின்னர் மதியம் 1.46 மணியில் இருந்து மதியம் 2.08 மணி அளவில் சுப மகர லக்கனத்தில் தசரா ஊர்வலத்திற்கான பணிகள் தொடங்குகிறது. முதலில் அலங்கார ஊர்திகள் மற்றும் கலைக்குழுவினரின் ஊர்வலம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 4.40 மணி முதல் மாலை 5 மணிக்குள் சுப மீன லக்கனத்தில் ஜம்பு சவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் தொடங்கும்.

சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து கொண்டு விழா மேடை அருகில் வரும். அப்போது விழா மேடையில் நிற்கும் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் அம்பாரிக்குள் இருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்தூவி தசரா ஊர்வலத்தை தொடங்கி வைக்க உள்ளனர். இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா, மந்திரிகள் கே.வெங்கடேஷ், சிவராஜ் தங்கடகி, மேயர் சிவக்குமார், மன்னர் யதுவீர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதையடுத்து தசரா ஊர்வலம் தொடங்கும். இதில் தங்க அம்பாரியுடன் அபிமன்யு யானை கம்பீர நடை போடும். அதன் முன்னும், பின்னும் மற்ற தசரா யானைகள் அணிவகுத்து செல்லும். மேலும் குதிரைப்படை, ஒட்டகப்படை, போலீசார் அணிவகுத்து செல்வர். மேலும் போலீஸ் இசைக்குழு, யக்ஷகானா உள்பட பல்வேறு கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஊர்வலமாக செல்வார்கள். இதில் மாநிலம் முழுவதுமு் இருந்த மொத்தம் 55 கலைக்குழுக்கள் பங்கேற்கின்றன.

அத்துடன் கர்நாடகத்தின் கலை, பண்பாட்டு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 49 அலங்கார ஊர்திகளும் இந்த ஊர்வலத்தில் அணிவகுப்பு நடத்துகின்றன. கர்நாடகத்தில் உள்ள 31 மாவட்டங்கள் சார்பில் அந்தந்த மாவட்டங்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலான வண்டிகளும், அரசின் உத்தரவாத திட்டங்கள் மற்றும் பல்வேறு சாதனைகளை கூறும் வகையிலான 14 அலங்கார வண்டிகளும் உள்பட மொத்தம் 49 அலங்கார வண்டிகள் பங்கேற்கின்றன. இந்த அலங்கார ஊர்திகளில் பெங்களூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தியாவின் வெற்றி திட்டமான நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-3 விண்கல மாதிரி அலங்கார வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யானைகள், கலைக்குழுக்குள், அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த காட்சிகளை மைசூரு நகரின் வீதிகளில் மக்கள் திரண்டு வந்து காண உள்ளனர். அரண்மனை வளாகத்தில் இருந்து தொடங்கும் இந்த ஊர்வலம் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னி மண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை நடக்கிறது.

ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் ராஜவீதியில் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு ஜம்பு சவாரி ஊர்வலம் மற்றும் கலைக்குழுவினரின் நிகழ்ச்சியை ரசிப்பார்கள். இரவு 9 மணி அளவில் தசரா ஊர்வலம் பன்னி மண்டபத்தை சென்றடையும். பின்னர் அங்கு கண்களை கவரும் வகையில் லைட் ஷோ மற்றும் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்படுகிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான தசரா விழா நிறைவடைகிறது.

இந்த தசரா ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான மக்கள் மைசூருவில் குவிந்து வருகிறார்கள். தசரா ஊர்வலத்தை காண மைசூரு நருக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் மைசூரு நகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களும் நிரம்பி விட்டன.

ஜம்புசவாரி ஊர்வலத்தையொட்டி மைசூரு நகரில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஊர்வலம் நடக்கும் ராஜவீதியில் உயரமான கோபுரங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மைசூரு தசரா விழா உச்சக்கட்டத்தை எட்டி உள்ளதால் மைசூரு நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story