வயதான தம்பதி படுகொலை


வயதான தம்பதி படுகொலை
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:45 PM GMT)

சித்ரதுர்காவில் வயதான தம்பதியை படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிக்கமகளூரு:

வயதான தம்பதி

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா டவுன் விநாயகா படாவனே பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் ஷெட்டி (வயது 75). இவரது மனைவி விஜயலட்சமி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். இதனால் வயதான தம்பதியான பிரபாகர் ஷெட்டியும், விஜயலட்சுமியும் தனியாக வசித்து வந்தனர். மேலும் இவர்கள் ஒசதுர்கா டவுனில் உப்பு மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. மேலும் கதவும் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவர்களது வீட்டுக்கு சென்று கதவை தட்டினர்.

படுகொலை

அப்போது கதவு திறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பிரபாகரும், விஜயலட்சுமியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அந்தப்பகுதி மக்கள் உடனடியாக ஒசநகர் போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வயதான தம்பதியை யாரோ மர்மநபர்கள் படுகொலை செய்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

நகை, பணத்துக்காக வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்டனரா? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது சொத்து பிரச்சினையில் கொல்லப்பட்டார்களா? என்பது தெரியவில்லை. போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்கம்பக்கத்தினர், உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் உடல்களை பார்த்து மகள்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து ஒசதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story