அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு - சோரம்தங்கா அறிவிப்பு


அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு - சோரம்தங்கா  அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2024 2:28 PM GMT (Updated: 15 Jan 2024 3:29 PM GMT)

புதிய ஏற்பாடுகள் குறித்து கட்சியின் தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என சோரம்தங்கா கூறியுள்ளார்.

அய்சால்,

மிசோரம் மாநிலத்தின் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம்தங்கா, கட்சியின் மூத்த துணைத் தலைவர் டான்லூயாவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து விவாதித்ததாகவும், அவர்கள் இல்லாமல் கட்சி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று இருவரும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் நடைபெற்ற கட்சி அலுவலக திறப்பு விழாவில் பேசிய சோரம்தங்கா, "எனக்கும், கட்சியின் துணைத் தலைவர் டான்லூயாவுக்கும் 80 வயது ஆகிவிட்டது. எனவே இனி நாங்கள் இல்லாமல் கட்சி செயல்பாடுகள் தொடர வேண்டும்.

இதுபற்றி நாங்கள் இருவரும் ஆலோசித்து முடிவெடுத்து உள்ளோம். எங்களது ஓய்வு குறித்து கட்சித் தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளோம். புதிய ஏற்பாடுகள் குறித்து கட்சியின் தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் எம்என்எப் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, சோரம்தங்கா டிசம்பர் 5ம் தேதி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமாவை கட்சித் தலைமை நிராகரித்தது.

மிசோ தேசிய முன்னணியை நிறுவி 1966-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை இயக்கத்தை முன்னெடுத்த லால்தெங்காவின் மரணத்திற்குப் பிறகு, 1990 முதல் கட்சியின் தலைவராக சோரம்தங்கா பதவி வகித்து வருகிறார். சோரம்தங்கா 1979 -ல் எம்என்எப் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1987, 1989, 1993, 1998, 2003 2018 ஆகிய 6 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்று முறை முதல்-மந்திரியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story