தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கு; முக்கிய குற்றவாளியிடம் இளம்பெண்களின் நிர்வாண படங்கள், திடுக் பின்னணி


தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கு; முக்கிய குற்றவாளியிடம் இளம்பெண்களின் நிர்வாண படங்கள், திடுக் பின்னணி
x

தெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியின் மொபைல் போனில் பல இளம்பெண்களின் நிர்வாண படங்கள் சிக்கியுள்ளன.


ஐதராபாத்,


தெலுங்கானாவில் அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பெரும் போராட்டம் வெடித்து உள்ளது. தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே இளநிலை பொறியியலாளர் மற்றும் நகர திட்டம் சார்ந்த வினாத்தாள் கசிந்து உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து, உஸ்மானியா பல்கலை கழகத்தின் முன் மாணவர் தலைவர்கள் ஒன்று திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி உஸ்மானியா பல்கலை கழகத்தின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த கொத்தபள்ளி திருப்பதி செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த தேர்வுக்காக பல மாணவர்கள் காத்திருந்தனர்.

உஸ்மானியா பல்கலை கழகத்தில் பல ஆண்டுகளாக மிக கடுமையாக படித்து வந்தனர். ஆனால், சில பணக்காரர்கள் ரூ.5 லட்சத்திற்கும், ரூ.10 லட்சத்திற்கும் தெலுங்கானா அரசு தேர்வாணைய வேலையை பெற்று விடுகிறார்கள்.

தெலுங்கானா அரசு தேர்வாணைய தலைவர் ஜனார்த்தன் ரெட்டி உடனடியாக பதவி விலக வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என கூறினார்.

தெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தலின் கீழ் தெலுங்கானா ராஜ்பவன், தெலுங்கானா அரசு தேர்வாணைய செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

அதில், விவகாரம் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்குவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் அவற்றை தவிர்க்க தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்களையும் கேட்டு உள்ளது.

அதுபற்றிய விரிவான விசாரணை அறிக்கையை 48 மணிநேரத்தில் அளிக்கும்படியும் கவர்னர் தமிழிசை நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளார். தெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கில் முதலில் ஐதராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதுபற்றி தென்மேற்கு மண்டல டி.சி.பி. கிரண் பிரபாகர் கூறும்போது, தெலுங்கானா அரசு தேர்வாணைய உதவி செயலாளர் (நிர்வாகம்) அளித்த புகாரின் அடிப்படையில் பேகம் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. உதவி பொறியியலாளர் வினாத்தாள் கசிவு மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேரை கைது செய்து உள்ளனர் என கூறினார்.

இந்த நிலையில், உதவி பொறியியலாளர் பணிக்கான தேர்வில் வினாத்தாள் கசிவு வழக்கானது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து வழக்கை அவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள். குற்ற பிரிவு மற்றும் ஐதராபாத் நகர சிறப்பு புலனாய்வு குழுவின் கூடுதல் போலீஸ் கமிஷனர் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை இனி நடைபெறும். அதுபற்றி அவர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் பிரவீன் குமார் (வயது 32) முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு உள்ளார். இதுதவிர, ராஜசேகர் (வயது 35), ரேணுகா (வயது 35), தகநாயகே (வயது 38), கே. ராஜேஷ்வர் (வயது 33), கே. நிலேஷ் நாயக் (வயது 28), பி. கோபால் நாயக் (வயது 29), கே. ஸ்ரீனிவாஸ் (வயது 30) மற்றும் ராஜேந்திர நாயக் (வயது 31) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அனைவரும் சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டனர். முக்கிய புள்ளிகளான பிரவீன் மற்றும் ராஜசேகரிடம் இருந்து வினாத்தாள்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

லேப்டாப்புகள், கணினிகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு நடந்த, குரூப்-1 தேர்வின் முதல்நிலை தேர்விலும் இதுபோன்று வினாத்தாள்கள் கசிந்தனவா? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில், பிரவீனின் செல்போனில் பல இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் வினாத்தாள் கசிய செய்த விவரங்களை ஒப்பு கொண்டார். ஆனால், யாரேனும் உதவி செய்தனரா? என்பது பற்றிய விவரங்களை விசாரணையில் தெரிவிக்கவில்லை.

அவர், போலீஸ் அதிகாரியின் குடும்பத்தில் வந்தவர் என கூறப்படுகிறது. இதனால், அரசு தேர்வாணைய அலுவலகத்தில் மதிப்புடன் நடத்தப்பட்டு உள்ளார். உயரதிகாரிகளிடம் மிக பணிவாகவும், கீழ்ப்படிந்தும் நடந்து கொண்டு, அவர்களுடன் நெருங்கி பழகி வந்து உள்ளார்.

அதன்பின் கமிஷனின் செயலாளருக்கு தனி உதவியாளராக (பி.எ.) பணியாற்றி உள்ளார். தொழில் நுட்ப விசயங்களில் கைதேர்ந்தவரான அவர், அவற்றை பயன்படுத்தி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து உள்ளார்.

ஐ.பி. முகவரி, பயனாளர் அடையாள முகவரி, பாஸ்வேர்டுகள் மற்றும் பிற விசயங்களை ரகசிய முறையில் சேகரித்து உள்ளார். சங்கர் லட்சுமி என்பவருடன் சேர்ந்து கொண்டு, கணினி பழுது நீக்கும்போது, செயலாளரின் பயனாளர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி வினாத்தாள் நகல்களை ராஜசேகரும், சங்கர் லட்சுமியும் எடுத்து உள்ளனர். அதனை பென் டிரைவுக்கு மாற்றி பிரவீனிடம் கொடுத்து உள்ளனர்.

அவை ரேணுகா தம்பதிக்கு கைமாறி உள்ளது. அதன்பின் நிலேஷ் மற்றும் கோபாலுக்கு விடுதி ஒன்றில் வைத்து ரூ.14 லட்சத்திற்கு விற்கப்பட்டு உள்ளது. அவற்றில் முதல் தவணையாக ரூ.5 லட்சம் பிரவீனிடம் ரேணுகா தம்பதி கொடுத்து உள்ளனர். தேர்வுக்கு பின்னர், பாலாப்பூர் பகுதியில் வைத்து மற்றொரு ரூ.5 லட்சம் பிரவீனிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

கல்வி தகுதிகளுடன், ஆசிரியர் பணிக்கான முன் அனுபவம் உள்ளவர்கள் குருகுல முதல்வர்கள் பணிக்கான பதவி நியமனத்திற்கு தேவைப்பட்டு உள்ளனர். இதற்கான தேர்வை தெலுங்கானா அரசு தேர்வாணையம் நடத்தி உள்ளது.

ஆனால், ஆசிரியர் பணிக்கான முன் அனுபவம் எதுவுமில்லாத பெண்களுக்கு பிரவீன் உதவி செய்து உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன் என கூறி பெண்கள், இளம்பெண்களின் மொபைல் போன் எண்களை பிரவீன் எடுத்து கொண்டு உள்ளார். தேர்வில் தேர்ச்சி பெற உதவுகிறேன் என்று கூறி அவர்களை தனது வலையில் விழவைத்து உள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story