கணவர் மற்றும் மாமியார் மீது பிரபல மல்யுத்த வீராங்கனை வரதட்சணை குற்றச்சாட்டு


கணவர் மற்றும் மாமியார் மீது பிரபல மல்யுத்த வீராங்கனை வரதட்சணை  குற்றச்சாட்டு
x

image courtesy; WFI/ via ANI

தினத்தந்தி 9 Aug 2023 1:11 PM IST (Updated: 9 Aug 2023 1:20 PM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது பிரபல மல்யுத்த வீராங்கனை குற்றம் சாட்டியுள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா. இவர் பல மல்யுத்த போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 வருடங்கள் கடந்த நிலையில் இவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது குவாலியர் மாவட்ட காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வருவதாகவும், சில நேரங்களில் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் வரதட்சணை தரவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகின்றனர் என கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், 'எனக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எனது தந்தை கடன் வாங்கி எனது திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த 6 மாதம் வாழ்க்கை சுமுகமாக சென்றது. அதன் பின் எனது கணவர் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்த தொடங்கினர். வரதட்சணை போதவில்லை என, எனது தந்தையிடம் கேட்டு மேலும் வாங்கி வா என்று நச்சரிக்க தொடங்கினர். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை கூட அடித்து துன்புறுத்தாத இந்த காலத்தில் எனது கணவர் என்னை பலமுறை அடித்து துன்புறுத்தினார். கடைசியாக இந்த மே மாத இறுதியில் என்னை அடித்து உனக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டார். வரதட்சணை வாங்கி வா இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேறு என கூறுகின்றனர். மேலும் எனது மல்யுத்த கனவிற்கும் தடங்கலாக இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் எனக்கு அரசாங்கம் தான் உதவ வேண்டும்' என கூறியுள்ளார்.

1 More update

Next Story