சிகாரிப்புராவில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை


சிகாரிப்புராவில்  கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:46 PM GMT)

சிகாரிப்புராவில் கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிவமொக்கா-

சிகாரிப்புராவில் கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா அரளிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா (வயது58). இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில் நஞ்சப்பா வாைழ, உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனது.

இதனால் மழையை நம்பி விவசாயம் செய்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேப்போல் நஞ்சப்பாவும் மழையை நம்பியே விவசாயம் செய்துள்ளார். இந்தநிலையில், அவர் விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் வெயிலில் கருகின. இதனால் நஞ்சப்பா மனவேதனை அடைந்தார். இதற்கிடையே கடன் கொடு்த்தவர்கள் அவரிடம் திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.

தற்கொலை

ஆனால் நஞ்சப்பாவால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நியாமதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் நஞ்சப்பா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிகாரிப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story