டெல்லியில் 72 மணி நேர போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்


டெல்லியில் 72 மணி நேர போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்
x

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனப்படும் 72 மணிநேர போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்திருந்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு இந்த போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி வரத் தொடங்கினார்கள். இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளரும், சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் தியாகத் நேற்று ஜந்தர் மந்தர் சென்றபோது அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர் போராட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி சென்றார்.

இந்தநிலையில் திட்டமிட்டபடி டெல்லியில் இன்று காலை முதல் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.டெல்லி புறநகர் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளான சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதி களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.டெல்லி தலைநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.


Next Story