தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார், பரூக் அப்துல்லா...!


தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார், பரூக் அப்துல்லா...!
x

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா விலகுகிறார். புதிய தலைவராக அவருடைய மகன் உமர் அப்துல்லா பொறுப்பேற்கிறார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில், செல்வாக்கான அரசியல் கட்சிகளில் தேசிய மாநாட்டு கட்சி முக்கியமானது. பலமுறை காஷ்மீரில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி., முதல்-மந்திரியாக இருந்துள்ளார். அவர் 1983-ம் ஆண்டில் இருந்து கட்சி தலைவராக உள்ளார். தற்போது, ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். 85 வயதான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கட்சி தலைவர் பதவிக்கு இனிமேல் போட்டியிட மாட்டேன். தலைவர் பதவிக்கான தேர்தல், டிசம்பர் 5-ந் தேதி நடக்கிறது. பொறுப்புகளை புதிய தலைமுறை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இது ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தல். கட்சியை சேர்ந்த யார் ேவண்டுமானாலும் போட்டியிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா, தற்போது தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவராக இருக்கிறார்.

பரூக் அப்துல்லாவை தொடர்ந்து உமர் அப்துல்லா கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரூக் அப்துல்லா, கட்சியின் புரவலர் என்ற பதவியை வகிப்பார் என்று தெரிகிறது.


Next Story