பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:45 PM GMT)

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கமகளூரு:-

வரதட்சணை கேட்டு...

சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா வீரத்தீம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பம்பண்ணா. தொழிலாளி. இவருக்கும் ஜெயம்மா (வயது 28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான புதிதில் பெண் வீட்டார் பம்பண்ணாவுக்கு வேண்டிய அளவு வரதட்சணை கொடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு பம்பண்ணா, ஜெயம்மாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து பம்பண்ணாவின் வீட்டாரிடம், ஜெயம்மா கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், பம்பண்ணாவின் தாய் மற்றும் சகோதரரும் சேர்ந்து, கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.

அடிக்கடி தகராறு

இதனால் ஜெயம்மா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு பம்பண்ணா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதும் அவர் தனது மனைவியை வரதட்சணை வாங்கிவருமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஜெயம்மா வரதட்சணை வாங்கி வரமுடியாது என திட்டவட்டமாக கூறி உள்ளார். இதனால் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஜெயம்மா கோபித்து கொண்டு வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்றார். இந்த நிலையில் ஜெயம்மா தனது அந்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக செல்லகெரே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

போலீசில் புகார்

மேலும், விசாரணை நடத்தினர். விசாரணையில் பம்பண்ணா தனது தாய் மற்றும் சகோதரருடன் சேர்ந்து ஜெயம்மாவை கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த ஜெயம்மா தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், ஆத்திரத்தில் தங்கள் மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு விட்டதாக பெண்ணின் பெற்றோர் செல்லகெரே போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பம்பண்ணா மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடலை மீட்டு பிரேத பிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story