மராட்டிய முன்னாள் மந்திரி சாலை விபத்தில் மரணம்


மராட்டிய முன்னாள் மந்திரி சாலை விபத்தில் மரணம்
x

மராட்டிய முன்னாள் மந்திரி வினாயக் மிதே சென்ற கார் மீது மற்றொரு வாகனம் இன்று காலை மோதியதில் அவர் மரணமடைந்து உள்ளார்.

புனே,



மராட்டியத்தில் சிவ சங்க்ரம் கட்சி தலைவர் மற்றும் மராட்டிய மேலவையின் முன்னாள் உறுப்பினராக இருந்தவர் வினாயக் மிதே (வயது 52). மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் கொண்ட அவர், இன்று காலை மும்பையில் இருந்து புறப்பட்டு புனே நோக்கி சென்றுள்ளார்.

அவரது கார், ராய்காட் மாவட்டத்தில் மதப் சுரங்க பகுதியருகே, மும்பை-புனே விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது கார் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு பன்வெல்லில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அவர் துரதிர்ஷ்டவசத்தில் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்டவை குறைந்து காணப்பட்டது. ஈ.சி.ஜி. எடுத்தபோது அவரது இதய இயக்கமும் இல்லை என தெரிய வந்தது. படுகாயங்களுடன் கொண்டு வரப்பட்ட அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என மருத்துவர் கூறியுள்ளார்.


Next Story