மும்பை அருகே ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து; மீட்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


மும்பை அருகே ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து; மீட்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
x

கடலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அதில் 4 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) அரபிக்கடலில் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது, அவை கடலுக்கு அடியில் உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன.

இந்த நிலையில், 7 ஓஎன்ஜிசி பணியாளர்கள் மற்றும் 2 விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, இன்று மும்பை ஓஎன்ஜிசி ரிக் சாகர் கிரண் அருகே அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மும்பை கடற்கரையில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி நிலைய பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றது. ஆனால், இறங்க வேண்டிய இடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ., தொலைவில், ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது.

இந்திய கடலோர காவல்படையின் தகவல்படி, இன்று காலை 11.46 மணிக்கு, மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (எம்ஆர்சிசி) ஒரு பேரிடர் அழைப்பு வந்தது.

உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, ஓஎன்ஜிசி படகுகள் மற்றும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு கடலில் மிதந்தபடி தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.தற்போது மீட்பு பணிகள் நிறவடைந்துள்ள நிலையில், ஹெலிகாப்டர் கடலில் இறக்கப்பட்டதால், அதில் பயணித்த ஒன்பது பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட நான்கு பேர் மருத்துவ சிகிச்சைக்காக கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் ஜூஹூ பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிர்ச்சேதமின்றி பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அதில் 4 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நால்வரும் ஓஎன்ஜிசி பணியாளர்கள் ஆவார்கள். மேலும், 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் முகேஷ் படேல், விஜய் மண்லோய், சத்யம்பத் பத்ரா மற்றும் சஞ்சு பிரான்சிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்குவதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கடல் மேல் பயணிக்கும் இத்தகைய ஹெலிகாப்டர்களுடன் மிதவைகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மிதவைகளைப் பயன்படுத்தி ஹெலிகாப்டர் கடலில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story