சந்திரகுப்த மவுரியரைப்போல 'மோடியின் பொற்காலம் குறித்தும் எதிர்கால தலைமுறை படிக்கும்'- மத்திய மந்திரி பெருமிதம்


சந்திரகுப்த மவுரியரைப்போல மோடியின் பொற்காலம் குறித்தும் எதிர்கால தலைமுறை படிக்கும்- மத்திய மந்திரி பெருமிதம்
x
தினத்தந்தி 19 Feb 2023 9:22 PM GMT (Updated: 19 Feb 2023 9:31 PM GMT)

சந்திரகுப்த மவுரியரைப்போல மோடியின் பொற்காலம் குறித்தும் எதிர்கால தலைமுறை படிக்கும் என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 'நமது வரலாறு பாடத்தில் சந்திரகுப்த மவுரியரின் பொற்கால ஆட்சி குறித்து நாம் படித்து இருக்கிறோம். இன்றும் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் உள்ளது. இதைப்போல அடுத்த தலைமுறைகள், 3-வது, 4-வது தலைமுறைகள் பிரதமர் மோடியின் பொற்காலம் குறித்து படிப்பார்கள். அவர்கள் இந்திய வரலாறு படிக்கும்போது இது கற்பிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் எத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது எதிர்கால தலைமுறைகளுக்கு கற்பிக்கப்படும் என தெரிவித்த மாண்டவியா, நமது வருங்கால சந்ததியினர், தங்கள் தந்தையரும், முன்னோர்களும் மோடியின் ஆதரவாளர்கள் என்றும், மோடி அரசில் அங்கம் வகித்தவர்கள் என்றும் பெருமிதம் கொள்வார்கள் எனவும் கூறினார்.

மேலும் கொரோனா தொற்று நிர்வாகம், நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம், சர்ஜிக்கல் மற்றும் வான்வழி தாக்குதல்கள், இந்தியாவின் வெளியுறவு கொள்கை போன்றவற்றால் உலகமெங்கும் இந்தியா புகழப்படும் எனறும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


Next Story