விநாயகர் ஊர்வலத்தில் சென்ற சிறுமி மயக்க ஊசி போட்டு கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்


விநாயகர் ஊர்வலத்தில் சென்ற சிறுமி மயக்க ஊசி போட்டு கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்
x

சிறுமிக்கு மயக்க ஊசிபோட்டு கடத்திச்சென்று 3 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை:

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், எம்மிராஜுலா கண்ட்ரிகா என்ற பகுதியில் விநாயகர் சதுர்த்தியொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து விஜர்சன ஊர்வலம் நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

ஆனால் ஊர்வலம் முடிந்த பிறகும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் மகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் கழித்து சிறுமி மயங்கிய நிலையில் துணிகள் கிழிந்து உடலில் பல இடங்களில் ரத்தக்காயத்துடன் வீடு வந்து சேர்ந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கேட்டபோது தன்னை சிலர் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கே.வி.புரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்தபோது 3 பேர் கும்பல் சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.

இதையடுத்து மயங்கிய சிறுமியை அவர்கள் ஆட்டோவில் தூக்கிபோட்டு கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் மறைவான இடத்திற்கு சென்றபிறகு அவர்கள் 3 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் வீட்டின் அருகே சிறுமியை இறக்கி விட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். பலாத்காரம் செய்தவர்களில் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த குணா என்பதும் அவருடன் 2 பேரும் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story