ஞானவாபி மசூதி: அகழாய்வை தொடர அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி


ஞானவாபி மசூதி: அகழாய்வை தொடர அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 3 Aug 2023 5:39 AM GMT (Updated: 3 Aug 2023 6:50 AM GMT)

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அகழாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

அலகாபாத்,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு தடைவிதித்தது. மேலும், இதுதொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டை அணுக கேட்டுக்கொண்டது. இதனால் மசூதி சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் ஆய்வுக்கு தடைவிதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் ஆகஸ்டு 3-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட்டு தெரிவித்தது.

அதன்படி இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதி நலன் கருதி ஞானவாபி மசூதியில் அறிவியல் பூர்வமான அகழாய்வு நடத்த அவசியம் உள்ளது என தெரிவித்து ஞானவாபி மசூதியில் அகழாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. மேலும் மசூதி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு மசூதி கமிட்டிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.


Next Story