ஆட்சி அமைக்கும் விவகாரம்; மராட்டிய கவர்னரை சந்திக்க பட்னாவிஸ், ஷிண்டே முடிவு


ஆட்சி அமைக்கும் விவகாரம்; மராட்டிய கவர்னரை சந்திக்க பட்னாவிஸ், ஷிண்டே முடிவு
x

மராட்டிய கவர்னரை பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று சந்திக்க முடிவு செய்துள்ளனர்.



புனே,



மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகா விகாஸ் அகாடியின் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 20ந்தேதி இரவில், மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓரணியில் திரண்டு அசாம் மாநிலம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் புளூ ரேடிசன் என்ற ஆடம்பர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அவர்களை திரும்ப வரும்படி சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தும் அதன் பலனில்லை.

மகா விகாஸ் கூட்டணியில் இருந்து வெளியே வரும்படி ஷிண்டே டுவிட்டரில் பதிவிட்டார். இந்நிலையில், மராட்டியத்தில் ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜ.க. களத்தில் இறங்கியது. அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் டெல்லிக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் இரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில கட்சி தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த கவர்னர் கோஷ்யாரி சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து திரும்பினார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிட கவர்னரை கோரி உள்ளோம். இது தொடர்பாக கடிதமும் கொடுத்துள்ளோம்.

கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார். மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி நான் உத்தரவிடவில்லை என கவர்னர் நேற்று முதலில் கூறினார். ஆனால் அதன்பின்னர், மராட்டிய சபாநாயகர் அவையை இன்று கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று உத்தரவிட்டார்.

இதற்காக, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு கோவாவுக்கு பயணம் மேற்கொண்டனர். கோவாவில், தாஜ் ரிசார்ட்டில் அவர்களுக்கு 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே நேற்றிரவு ராஜினாமா செய்துள்ளார். அவர், எனது சொந்த மக்களே நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என கூறிய தகவல் சாம்னா பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

கோவாவின் பனாஜி நகரில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ. அணியை சேர்ந்த தீபக் கேசர்கார் இன்று கூறும்போது, மராட்டிய பா.ஜ.க. தலைவர் பட்னாவிஸ் பதவி பிரமாண தேதி பற்றி முடிவு செய்வார். தேதியை வழங்குவது கவர்னரின் சிறப்புரிமைக்கு உட்பட்டது. எங்களது பேச்சுவார்த்தைகள் முன்பே தொடங்கப்பட்டு விட்டன. நாங்கள் அரசமைப்போம். நாளை பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றால், நாங்கள் மும்பைக்கு செல்வோம் என்று கூறினார்.

இந்த சூழலில், மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை மராட்டிய பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று சந்திக்க முடிவு செய்துள்ளனர். அவரை சந்தித்து அரசு அமைக்க உரிமை கோரக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மராட்டியத்தில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.


Next Story