'பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்' - போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு மத்திய அரசு அழைப்பு


பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் - போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு மத்திய அரசு அழைப்பு
x
தினத்தந்தி 6 Jun 2023 8:48 PM GMT (Updated: 7 Jun 2023 6:30 AM GMT)

பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பிரிஜ்பூஷண் சரன்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ்பூஷணிடம் டெல்லி போலீசார் இதுவரை 2 முறை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை சரன்சிங் கைது செய்யப்படவில்லை.

அதேவேளை, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்பூஷணை கைது செய்ய வேண்டும் என கூறி மலியுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச முயற்சித்தனர். ஆனால், விவசாய சங்கத்தினர் தலையிட்டு பதக்கங்களை கங்கையில் வீசும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்பூஷணை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.


Next Story