அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடி


அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடி
x
தினத்தந்தி 1 Nov 2023 10:47 AM GMT (Updated: 1 Nov 2023 10:52 AM GMT)

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்து வருகிறது. 2017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்கு சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் இருந்து வந்தது.

எனினும், கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கு பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில், கடந்த அக்டோபரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது என நிதி அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், நடப்பு ஆண்டு அக்டோபருக்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு அடுத்து 2-வது அதிக வசூல் ஆகும்.

இதில், உள்நாட்டு பரிமாற்றங்கள் (இறக்குமதி சேவை உள்பட) வழியே கிடைத்த வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 13 சதவீதம் அதிகம் ஆகும்.

இதனால், 2023-24-ம் நிதியாண்டிற்கான சராசரி ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 11 சதவீதம் அதிகம் ஆகும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

ஒரு மாதத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு கூடுதலான ஜி.எஸ்.டி. வசூலை, தொடர்ந்து 8-வது மாதம் ஆக ஈட்டி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பருடன் ஒப்பிடும்போது, அக்டோபர் ஜி.எஸ்.டி. வசூலானது 5.71 சதவீதம் அதிகம் ஆகும்.


Next Story