குஜராத் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை


குஜராத் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
x

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி அந்த மாநில பா.ஜனதா தலைவர்களுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

பலன்பூர்,

182 உறுப்பினர்களை குஜராத் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குஜராத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அந்த மாநிலத்தில் முகாமிட்டு பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே வதோதரா, வால்சாத் ஆகிய மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், நேற்று பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பலன்பூரில் நடந்த வடக்கு குஜராத் மண்டல கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திரபட்டீல், மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பட்டீல், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் அமித்ஷா உரையாடினார். மேலும் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். இந்த சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும், அதற்காக உழைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


Next Story