குட்கா விவகாரம் : சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு


குட்கா விவகாரம் : சென்னை ஐகோர்ட்டு  தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு
x

இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதை எதிர்த்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன என தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில்,'குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களினால் ஏற்படும் ஆபத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட்டு அதனை ரத்து செய்துள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Next Story