மல்யுத்த சம்மேளன தேர்தலை நடத்த கவுகாத்தி கோர்ட்டு விதித்த தடை நீக்கம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மல்யுத்த சம்மேளன தேர்தலை நடத்த கவுகாத்தி கோர்ட்டு விதித்த தடை நீக்கம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 July 2023 11:22 AM GMT (Updated: 19 July 2023 11:42 AM GMT)

கவுகாத்தி ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தர் பகுதியில் வினேஷ் போகாட், சங்கீதா போகாட், சாக்ஷி மாலிக், சத்யவா்த் காடியான் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று, அவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிட்டனர்.

இதனிடையே பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷணின் 3-வது பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த இந்திய ஒலிம்பிக் கழகம் முடிவு செய்தது. தொடர்ந்து இந்த தேர்தலுக்கான தேதி மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டு கடைசியாக ஜூலை 16-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலை எதிர்த்து கவுகாத்தி கோர்ட்டில் அசாம் மல்யுத்த சங்கம் வழக்கு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மல்யுத்த சம்மேளன தேர்தலுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கவுகாத்தி ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கியது. இதையடுத்து மல்யுத்த சம்மேளன தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story