எச்.விஸ்வநாத், சீனிவாச பிரசாத் எம்.பி. இடையே வார்த்தை மோதல் முற்றுகிறது


எச்.விஸ்வநாத், சீனிவாச பிரசாத் எம்.பி. இடையே வார்த்தை மோதல் முற்றுகிறது
x
தினத்தந்தி 16 Dec 2022 9:28 PM GMT (Updated: 16 Dec 2022 9:28 PM GMT)

காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த நிலையில் எச்.விஸ்வநாத், சீனிவாச பிரசாத் எம்.பி. இடையே வார்த்தை மோதல் முற்றுகிறது.

மைசூரு:-

வார்த்தை மோதல்

பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான எச்.விஸ்வநாத், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி

சித்தராமையா ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனால் அவர் காங்கிரசில் இணைவது உறுதியாகி உள்ளது. எச்.விஸ்வநாத் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துள்ள நிலையில், அவருக்கும், சாம்ராஜ்நகர் தொகுதி பா.ஜனதா எம்.பி. சீனிவாச பிரசாத் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஒருவரை பற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள். இதனால் அவர்களின் வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது.

சுயநல அரசியல்வாதி

நேற்று முன்தினம் எச்.விஸ்வநாத் நிருபர்களிடம் கூறுகையில், நான் 3 கட்சிகள் தான் மாறி உள்ளேன். என்னை விட சீனிவாச பிரசாத் அதிக கட்சிகளை மாறி உள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது. தலித் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் அவர், தலித் மக்களின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. சீனிவாச பிரசாத் சுயநல அரசியல்வாதி. அவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. பா.ஜனதா மேலிடம், எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை பெருமைப்படுத்த நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.

பணத்துக்காகவும், பதவிக்காகவும்...

இதற்கு பதிலடி கொடுத்து நேற்று மைசூருவில் சீனிவாச பிரசாத் கூறுகையில், எச்.விஸ்வநாத், பணத்துக்காகவும், பதவிக்காகவும் கட்சி மாறுபவர். காங்கிரசில் இருந்தபோது, பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அக்கட்சியில் இருந்து விலகி ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். அங்கும் அவருக்கு மந்திரி பதவி கிடைக்காததல் பா.ஜனதாவுக்கு வந்தார்.

பா.ஜனதாவில் சேருவதற்கு எனது வீட்டுக்கு வந்தார். நான் தான் அவரை எடியூரப்பா வீட்டுக்கு அழைத்து சென்றேன். உன்சூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலுக்காக அவருக்கு ரூ.15 கோடி வழங்கப்பட்டது. ஆனால், ரூ.5 கோடியை மட்டும் செலவு செய்த எச்.விஸ்வநாத், மீதி ரூ.10 கோடியை தானே வைத்து கொண்டார். தொகுதியில் சரியாக செலவு செய்யாததால் அவர் தோல்வியை தழுவினார்.

அவர் எம்.பி.யாக இருந்தபோது, ஒருமுறை கூட மக்கள் பிரச்சினை பற்றி பேசவில்லை. கையெழுத்து மட்டுமே போட்டு வந்தார். நான் அவருக்கு செய்த உதவியை மறந்து பேசிக் கொண்டிருக்

கிறார் என்றார்.


Next Story