சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க சென்ற டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி படுகொலை! சுரங்க மாபியா கும்பல் அட்டூழியம்!


சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க சென்ற டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி படுகொலை! சுரங்க மாபியா கும்பல் அட்டூழியம்!
x

லாரி டிரைவர் அவர் மீது லாரியை ஏற்றினார்.இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

சண்டிகர்,

தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா மாநிலத்தில், சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப்பகலில், ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மீது லாரியை ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் உள்ள பச்கான் என்ற இடத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு தகவல் கிடைத்தது. உடனே இன்று காலை 11 மணியளவில் அவர் போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றார்.

போலீசாரை கண்டதும், சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது அந்த அதிகாரி நடுவழியில் நின்றுகொண்டு, கல் ஏற்றி சென்ற வாகனங்களை நிறுத்துமாறு சைகை காட்டினார்.

ஆனால் அதில் ஒரு லாரியின் டிரைவர் அவர் மீது லாரியை ஏற்றினார். இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஏனைய சில போலீசார் படுகாயமடைந்தனர்.

இந்த கொடூரத்தை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய நபர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் உறுதியளித்ததோடு, காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

2021-22ஆம் ஆண்டிற்கான அரியானா பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2014-15 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில், முறையான அனுமதி ஆவணங்கள் இல்லாமல் கனிம வளங்களைக் வெட்டி செல்வது உட்பட மொத்தம் 21,450 சட்டவிரோத சுரங்க வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி, ஆரவல்லி பகுதியில் பல இடங்களில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story