நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் - மத்திய மந்திரி அறிவிப்பு


நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் - மத்திய மந்திரி அறிவிப்பு
x

விபத்து கால நெருக்கடியின்போது துரிதமாக செயல்படுவதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

குவாலியர்,

உத்தரகாண்டின் கேதார்நாத்தில் சமீபத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற விபத்து கால நெருக்கடியின்போது துரிதமாக செயல்படுவதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:- சமீபத்தில் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்களின்போது உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அந்தவகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக 780 மாவட்ட கலெக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் இதற்காக நிலையான வழிகாட்டுதல்களும் தயாரிக்கப்பட்டு விட்டன.

இதைப்போல நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 200 அல்லது 300 கி.மீ. தொலைவிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் திட்டம் இருக்கிறது. இது தொடர்பாக மத்திய போக்குவரத்து அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சஞ்சீவனி திட்டத்தின் கீழ், ரிஷிகேஷ் எய்ம்ஸ் உதவியுடன் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும். இதன் மூலம் விபத்து அல்லது பிற வகையான அவசரநிலை ஏற்பட்டால் 125 கி.மீ. தூரம் வரை உடனடி நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.


Next Story